search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி தர்ணா போராட்டம்"

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    செங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 22). இவர் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தபோது சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த நிவேதமணி (20) என்பவரை காதலித்து உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்துள்ளனர்.

    தற்போது நிவேதமணி 8 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு செங்கத்திற்கு வந்த ராஜேந்திரன் அதன் பின்னர் நிவேதமணியை தொடர்பு கொள்ளவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த நிவேதமணி செங்கத்திற்கு வந்து ராஜேந்திரனின் பெற்றோரிடம், அவரை பற்றி கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் எதுவும் கூறாமல் நிவேதமணியை வெளியே அனுப்பி விட்டனர். இதுகுறித்து நிவேதமணி செங்கம் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தார். ஆனால் தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் உள்ளதால் கலெக்டரை சந்திக்க முடியாது என அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதையடுத்து நிவேதமணி திடீரென கலெக்டர் அலுவலக வரவேற்பறை வளாகத்தின் முன்பு வெளியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைக்கண்ட போலீசார் நிவேதமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    ×